×

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... பென்னாகரம் அருகே சோகம்!

 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். சமையல் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (24). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். முருகேசன், கிருண்ஷகிரி மாவட்டம் ஓசூர் கால்நடை மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார். இதற்காக ஓசூரிலேயே தங்கிக்கொண்டு, வாரம் ஒரு முறை குடும்பத்திரை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், முருகேசனுக்கும், லட்சுமிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் லட்சுமி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் ஒகேனக்கல் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து லட்சுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 6 ஆண்டுகளில் லட்சுமி உயிரிழந்ததால் வரதட்சணை கொடுமை காரணமா? என தருமபுரி சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.