×

கரூரில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை... குடும்ப தகராறில் சோகம்!

 

கரூரில் குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உத்ரியா ஜுலி. இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஜுலி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஜுலி விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ஜுலி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.