×

பெருந்துறை சந்தையில் பெண் அடித்துக் கொலை - போலீசார் விசாரணை!

 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சந்தையில் நேற்றிரவு பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திருவேங்கடம்பாளையம் புதூரை சேர்ந்தவர் ராஜா மனைவி சாந்தா(58). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் இளைய மகன் கார்த்தி உடன் வசித்து வந்தார். மேலும், கட்டிட வேலைக்கு சென்று வந்தார். கார்த்திக் பெருந்துறை சந்தையில் உள்ள மளிகைக்கடையில் வேலை செய்து வந்தார். சாந்தாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் நாள்தோறும் மது அருந்தி விட்டு இரவில் பெருந்துறை சந்தையில் படுத்து தூங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு 7 மணி அளவில் மதுபோதையில் இருந்த சாந்தா, சந்தைக்கு தூங்க செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். இரவு 10 மணி அளவில் கார்த்திக், அவருக்கு சாப்பாடு வாங்கிக் கொண்டு சென்றபோது, சந்தையின் மேல் பகுதியில் தலையில் பலத்த ரத்தக் காயங்களுடன் சாந்தா சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்தி, இது குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.