×

பென்னாகரம் அருகே கணவர் இறந்த வேதனையில் மனைவி மரணம்!

 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே விபத்தில் கணவர் இறந்ததால் வேதனையில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மஞ்சநாயக்கன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் அரசுப்பேருந்து நடத்துநராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி காஞ்சனா(40). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று மாலை ஆதனூர் அருகே பாலகிருஷ்ணனும், அவரது இளைய மகளும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த கார் மோதியதில் பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் படுகாயமடைந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், கணவர் மீது அதிக அன்பு கொண்டிருந்த காஞ்சனா அவரது மறைவால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், திங்கட்கிழமை காலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து, உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு காஞ்சனாவை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். கணவர் விபத்தில் இறந்த நிலையில் வேதனையில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.