×

ஈரோடு அருகே வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஓட்டுநர் பலி!

 

ஈரோடு அருகே பால்வேன் மீது மற்றொரு வேன் மோதிய விபத்திற்குள்ளானதில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் சங்கை (40). இவர் பால்வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை சங்கை வெள்ளித்திருப்பூரில் இருந்து வேனில் பால் கேன்களை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலத்துக்கு சென்று கொண்டிருந்தார். கோபிசெட்டிபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது கொடிவேரி பிரிவு பகுதியில் பால் வேன் மீது, எதிரே வந்த மற்றொரு வேன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பால் வேனை ஓட்டிச்சென்ற சங்கை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், மற்றொரு வேனில் வந்த ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடகத்தூர் போலீசார், காயமடைந்த ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் பலியான சங்கை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.