×

திருவாடானை அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற விஏஓ கைது!

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே விவசாயியிடம் பட்டா மாறுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவர், லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள பில்லூர் குரூப் நவலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி (60). இவர் தனது நிலத்தின் பட்டாவை மாற்றம் செய்வதற்காக, பில்லூர் கிராம நிர்வாக அலுவலரான முரளியிடம் விண்ணப்பத்து உள்ளார். அப்போது, பாட்டா மாற்றம் செய்வதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் தர வேண்டுமென கூறி உள்ளார். 

லஞ்சம் தர விரும்பாத மணி, இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அதன் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை, மணியிடம் வழங்கி அதனை கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கும்படி அறிவுறுத்தினர்.  அதன்படி, வெள்ளையபுரம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலத்தில் வைத்து, விஏஓ முரளிடம், அவர் லஞ்ச பணம் ரூ.3 ஆயிரத்தை வழங்கினார்.

அப்போது, அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி உண்ணி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார், விஏஓ சதீஷை கையும், களவுமாக கைது செய்து, அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.