×

கம்பைநல்லூர் அருகே பைக்கில் வைத்திருந்த பணம், செல்போனை திருடிய இருவர் கைது!

 

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் மற்றும் செல்போனை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள கோட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (21). இவர் போச்சம்பட்டி பகுதியில் உள்ள சிப்காட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு சூர்யா, தனது உறவினருடன்  தருமபுரி மாவட்டம் இருமத்தூருக்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் கோட்டப்பட்டிக்கு திரும்பி கொண்டிருந்தனர். வழியில் அம்பேத்கர் நகர் பெருமாள் ஏரிக்கரை பகுதியில் வாகனத்தை  நிறுத்திவிட்டு இயற்கை உபாதையை கழித்துள்ளனர். அப்போது, இரண்டு மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தின் டேங்க் கவரில் வைத்திருந்த ரூ.5,700 பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பிச்சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து சூர்யா,  கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில், திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டியை சேர்ந்த தனுஷ் ( 20) மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் என்பது தெரியவந்தது.  இதனையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.