×

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது

 

ஈரோடு கருங்கல்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்திச்சென்ற 162 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு தீவிர கண்காணிப்பு பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கருங்கல்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  கிருஷ்ணம்பாளையம் கமல் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் இருவர் வந்து கொண்டிருந்தனர்.  சந்தேகத்தின் பேரில் போலீசார்,  வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். 

அப்போது, வாகனத்தில் சட்டவிரோதமாக ஏராளமான மதுபாட்டில்களை விற்பனைக்காக கடத்திச்சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, வாகனத்தில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சதீஷ்குமார்(31), சண்முகசுந்தரம் (51), என தெரிய வந்தது. இதனை அடுத்து, கருங்கல்பாளையம் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 162 மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.