×

காணும் பொங்கலையொட்டி உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

 

காணும் பொங்கலை ஒட்டி நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. 

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உதகையில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், காணும் பொங்கலை முன்னிட்டு நேற்றும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய இடங்களில் குவிந்தனர். குறிப்பாக அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையை குடும்பத்துடன் கண்டு களித்த அவர்கள், கிக்யூ புல்வெளிகளிலும் அமர்ந்து குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். 

இதேபோல், உதகை படகு இல்லத்திற்கும் அதிகளவில் வருகை தந்த சுற்றுலா பயணிகள், மிதிபடகு, துடுப்பு படகு மற்றும் மோட்டார் உற்சாகமாக சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும், தொட்டபெட்டா காட்சி முனைக்கு காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால், தொட்ட பெட்டா சாலையில் வாகன நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.