×

நாங்குநேரியில் பைக்கில் குட்கா கடத்திய மூவர் கைது - 20 கிலோ குட்கா பறிமுதல்!

 

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்திய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 20 கிலோ குட்கா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி ரயில்வே கேட் பகுதியில் நேற்று முன்தினம் உதவி ஆய்வாளர் கணேசன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அவர்கள் இருசக்கர வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் புகையிலை பொருட்களை கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

இது தொடர்பாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் சிங்கநேரியை சேர்ந்த சங்கர் கணேஷ்(27), வேல் கண்ணன்(27) மற்றும் துரை என்கிற வீரதுரை (32) என்பதும், அவர்கள் விற்பனை செய்வதற்காக குட்காவை கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து, 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.