×

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து, ஆசை இணங்கும்படி மிரட்டல்... கறிக்கடை உரிமையாளர் கைது!

 

ஈரோடு சூரம்பட்டி வலசில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து, ஆசைக்கு இணங்கும் படி மிரட்டிய கறிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் கண்ணன் (29). இவர் ஈரோடு சூரம்பட்டி வலசு அணைக்கட்டு பகுதியில் தங்கி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது எதிர்வீட்டில் திருப்பூரை சேர்ந்த  26 வயது இளம்பெண் ஒருவர் தங்கியிருந்து, போட்டித் தேர்வுகளுக்கு படித்து வருகிறார். சம்பவத்தன்று இளம்பெண் தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, கண்ணன் அதனை தனது செல்போனில் வீடியோ பிடித்துள்ளார்.

தொடர்ந்து, அந்த பெண்ணிடம் வீடியோவை காட்டி, தனது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டி உள்ளார். இல்லாவிட்டால் வீடியோவை சமூக வலைத் தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளார். அத்துடன், வீடியோ குறித்து வெளியே கூறினால், அவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், இது குறித்து சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், சூரம்பட்டி போலீசார் கண்ணன் மீது பெண் குளிப்பதை ஆபாசமாக படம் எடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த கண்ணனை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.