×

செல்போனை சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி!

 

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் செல்போனுக்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒரிடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தீபெக் (27). இவர் குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வட்டவிளை சானல் கரை பகுதியில் உள்ள ஆக்கர் கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு பணிமுடிந்து தீபெக் ஆக்கர் கடையில் இருந்தார். அப்போது அவர் தனது செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்காக மின்பெட்டியில் இருந்து தான் படுத்திருந்த கட்டில் வரை மின்ஒயரை நீடித்து செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக மின்பெட்டியில் இருந்து வந்த வயரில் மின் கசிவு ஏற்பட்டு, தீபெக் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த அவரை, சக தொழிலாளர்கள் மீட்டு குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தீபெக் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் கோட்டார் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.