×

திருச்சி அருகே அரசுப்பேருந்தில் இருந்து தவறி விழுந்து நடத்துநர் பலி!

 

திருச்சி அருகே பேருந்தின் படியில் இருந்து தவறி விழுந்து அரசுப்பேருந்து நடத்துநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஓமந்தூர் சிறுகுடி கிராமத்தை சேர்ந்தவர் முத்து (59). இவர் அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று முத்து பணி முடிந்து அரசுப்பேருந்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். வீரணை மயானம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் படியில் நின்றிருந்த முத்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் உள்ளவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில், புலிவலம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக முத்துவின் மகன் ஸ்ரீபால் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசுப்பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.