×

அரியலூரில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி ரூ.2 லட்சம் வழங்கிய ஆட்சியர்!

 

அரியலூரில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 20 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.2 லட்சத்தை ஆட்சியர் ரமண சரஸ்வதி வழங்கினார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

இந்த முகாமில் குடிநீர் வசதி, சாலை வசதி, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 418 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, ஆட்சியர் ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் அரியநூர் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் புதியதாக துவங்கப்பட்டு, 3 மாதம் முடிவடைந்த 20 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சூழல் நிதியாக ஒரு குழுவிற்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை ஆட்சியர் ரமண சரஸ்வதி வழங்கினார்.