×

குடும்ப தகராறில் தாயை வெட்டிக்கொன்ற மகன்... அரியலூர் அருகே கொடூரம்!

 

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே குடும்ப தகராறில் தாயை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள வெற்றியூரை சேர்ந்தவர் கணேசன். இவரத மனைவி சரஸ்வதி(71). இவர்களது மகன் ரவிச்சந்திரன். தொழிலாளி.  தாய், மகன் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த சரஸ்வதியுடன், ரவிச்சந்திரன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, தாய் சரஸ்வதியை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்த கீழ்ப்பழுர் காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, கொலையாளி ரவிச்சந்திரனை கைது செய்தனர். குடும்ப தகராறில் தாயை, மகன் அரிவாளால் வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.