×

செய்யாறு அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... உறவினர் போக்சோ சட்டத்தில் கைது!

 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த உறவினரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள வெங்களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளி. இவரது 11 வயது மகள், அங்குள்ள பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வள்ளிக்கும், அதே கிராமத்தில் வசிக்கும் உறவினர் வெங்கடேசன் (47) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இரு குடும்பத்தினர் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனை மனதில் கொண்டு, வெங்கடேசன் வள்ளியின் மகளான சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த வள்ளி, செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வெங்கடேசன் கடந்த 2 மாதங்களாக சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, போலீசார் வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.  தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.