×

போடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் கைது

 

தேனி மாவட்டம் போடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் போடி கருப்பசாமி கோவில் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மகன் மகாவிஷ்ணு(21). கல்லுரி மாணவரான இவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவியுடன் பழகி வந்துள்ளார். அப்போது, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான மாணவி, மகாவிஷ்ணுவிடம் பழகுவதை நிறுத்தி உள்ளார். எனினும் அவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், இதுகுறித்து போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் மகாவிஷ்ணு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.