×

வத்திராயிருப்பில் பெட்ரோல் பங்க்கில் ரூ.1.30 லட்சம் பணம் கொள்ளை... மர்மநபர்களுக்கு போலீசார் வலை!

 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் பெட்ரோல் பங்கிற்குள் புகுந்த ரூ.1.30 லட்சம் பணம் மற்றும் ஊழியரின் செல்போனை திருடிச்சென்ற 2 மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று அதிகாலை பங்க் ஊழியர்கள் விற்பனை பணம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கப்பணத்தை அறையில் வைத்துவிட்டு தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் பங்கிற்கு வந்த 2 மர்மநபர்கள், ஊழியர்கள் தூங்கிய அறைக்குள் நுழைந்து பையில் இருந்த பணம் மற்றும் ஊழியரின் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர். 

சிறிது நேரத்திற்கு பின் கண் விழித்த ஊழியர்கள், பெட்ரோல் விற்பனை பணம் மற்றும் செல்போன் ஆகியவை திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பங்க் ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, மர்மநபர்கள் இருவர் பணம் மற்றும் செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, சிசிடிவி காட்சி அடிப்படையில் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.