×

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கோழிக்கடை ஊழியர் கொலை... தூத்துக்குடியில் கொடூரம்!

 

தூத்துக்குடி தாளமுத்துநகரில் கோழிக்கடை ஊழியர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் சுடலையாபுரம் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் பெரியசாமி (24). இவர் அங்குள்ள கோழிக்கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று பெரியசாமி, தனது நண்பருடன் டி.சவேரியார்புரம் பகுதியில் மதுபோதையில் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த இளைஞருக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், மதுபோதையில் இருந்த பெரியசாமி அந்த இளைஞரை தாக்கியதாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்துக்கு பின்னர் உறவினர்களுடன் வந்த அந்த இளைஞர், பெரியசாமியிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது, எதிர்தரப்பினர் தாக்கி கீழே தள்ளியதில் பெரியசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த தாளமுத்து நகர் போலீசார் பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தந்தை முனியசாமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.