×

உதகை தாவரவியல் பூங்காவில் பொங்கல் விழா: பாரம்பரிய நடனம் ஆடி அசத்திய பழங்குடியின பெண்கள்!

 

உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் படுகர் மற்றும் தோடர் இன பெண்கள் பாரம்பரிய நடனமாடி அசத்தினர்.

மாட்டு பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில்  நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தனர்.

 பூங்காவின் மைய பகுதியில் பொங்கல் வைத்தபோது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்  பொங்கலோ, பொங்கல் என உற்சாகமாக கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து, சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. அதில் பரத நாட்டியம் நிகழ்ச்சியும், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தோடர் மற்றும் படுகர் பழங்குடியின பெண்கள் தங்களது பாரம்பரிய பாடல்களுக்கு நடனம் ஆடி அசத்தனர்.

இதனை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். மேலும் படுகர் இன பெண்கள் நடனமாடியபோது, சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு பாரம்பரிய பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். இறுதியில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர் ராமச்சந்திரன், ஆட்சியர் அம்ரித் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.