×

மணப்பாறை அருகே மின்வேலியில் சிக்கி பிளஸ் 2 மாணவர் பலி!

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மின்வேலியில் சிக்கி 12ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பெருமாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கள்ளழகர். விவசாயி. இவரது மகன் சாந்தகுமார் (17). இவர் பன்னாங்கொம்பு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு சாந்தகுமார், கிராமத்து பகவதி அம்மன் கோவில் அருகே உள்ள வயல் வெளிக்கு சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக வயலில் எலி தொல்லையை தடுக்க அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி சாந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த புத்தானத்தம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.