×

தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை... புதுக்கோட்டை அருகே சோகம்!

 

புதுக்கோட்டை மாவட்டம் அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பிளஸ் 2 மாணவர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முகமது அப்பாஸ். இவரது மகன் முகமது ஹனிப் (17). இவர் புதுக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், ஹனிப் பள்ளி அரையாண்டு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஹனிப், வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை முகமது அப்பாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.