×

ஈரோட்டில் பரிதாபம்... மது அருந்துவதை மனைவி கண்டித்ததால் பெயிண்டர் தற்கொலை!

 

ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியில் மதுஅருந்துவதை மனைவி கண்டித்ததால் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு சூரம்பட்டி வலசு எம்.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் மகாகிருஷ்ணன் (42). இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், மகாகிருஷ்ணனுக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த பழக்கத்தை கைவிடுமாறு கலைச்செல்வி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அவர் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று மகாகிருஷ்ணன் வழக்கம்போல் வீட்டில் வைத்து மது அருந்தி உள்ளார். இதனை கலைச்செல்வி கண்டித்ததால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த மகா கிருஷ்ணன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த கலைச்செல்வி, கதவை தட்டியுள்ளார். ஆனால் அவர் பதில் அளிக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துச்சென்று பார்த்தார்.

அப்போது, மகா கிருஷ்ணன் தூக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கலைச்செல்வி, அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மகா கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குழுபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.