×

"பி.எம். கிசான் திட்ட 13-வது தவணை தொகை பெற ஆதார் எண் உறுதி செய்வது அவசியம்" - காஞ்சிபுரம் ஆட்சியர் தகவல்!

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்ட பயனாளிகள் 13-வது தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் எண் உறுதி செய்வது அவசியம் என ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவி தொகையாக 4 மாதத்திற்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் , ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக ஒன்றிய அரசினால் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் 13-வது தவணையாக, 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் வரையிலான காலத்திற்கான தவணை தொகை பி.எம். கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என ஒன்றிய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. எனவே பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களின் கைபேசி மூலமாகவோ தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்காணும் முறைகளில் உறுதி செய்து கொளளலாம்.

1.உங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று தனது பெயரை பிஎம் கிசான் இணையதளத்தில் e-KYC செய்ய வேண்டுமென்று கோரும் நிலையில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணை பிஎம் கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம் (அல்லது) பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பிஎம் கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

2. உங்களது கைபேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி https://pmkisasn.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார்  e-KYC எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

எனவே பி.எம் கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால் மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறும், இது தொடர்பாக கூடுதல் விவரம் ஏதும் அறிய விரும்பினால் உங்கள் வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.