×

ஆய்க்குடியில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி!

 

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி ஸ்ரீபாலசுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஓருவர் உயிரிழந்தார். 

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் ஸ்ரீபாலசுப்பிரமணியசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை ஆய்க்குடி சிவன் கோவில் திடலில் நடைபெற்றது. இதில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, சூரபத்மன் உள்ளிட்ட சூரர்களை வதம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஆய்க்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்

அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கருப்பசாமி என்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கருப்பசாமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.