×

அரச்சலூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி முதியவர் பலி!

 

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே கீழ்பவானி வாய்க்கலில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு அருகே முத்தம்பாளையம் பூந்துறை சாலையில் உள்ள பங்க் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(67). இவர் அதே பகுதியில் கோழிகள் வளர்த்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ். இவர் ஈரோடு வண்டியூரான் கோவில் பகுதியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பழனிசாமி, அரச்சலூர் - ஈரோடு சாலை திருமங்கலம் பிரிவில் உள்ள கீழ்பவானி கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற பழனிசாமி, திடீரென தண்ணீல் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் நீரில் மூழ்கினார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் வாய்க்கலில் இறங்கி தேடிய நிலையில், அவரை மீட்க முடியவில்லை. இதனை அடுத்து, அவர்கள் அரச்சலூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வாய்க்காலில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பழனிசாமி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை அடுத்து, போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ராஜேஷ் அளித்த புகாரின் பேரில், அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.