×

கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் செவிலியர் மாணவி தற்கொலை... குமரி அருகே சோகம்!

 

கன்னியாகுமரி அருகே கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத விரக்தியில் செவிலியர் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள அந்தரபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் சுபிதா கிரேஸ் (21). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில்,  கல்லூரி செய்முறை தேர்வுக்கு சுபிதா கிரேஸ் கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. ஆசிரியர்கள் கட்டணத்தை செலுத்த கூறியதால் அவர் கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால், பெற்றோர் அவரை கல்லூரிக்கு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த சுபிதா கிரேஸ் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். 

மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் வீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை சுபிதா கிரேஸ் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் பூதப்பாண்டி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.