×

சென்னிமலை அருகே புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை!

 

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே திருமணமான 3 மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த பெரியார் நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் (38). இவர் கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஓட்டும் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பணி முடிந்து ரவிக்குமார் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். தொடர்ந்து, தனது நண்பர்களுக்கு செல்போனில் பேசிய படியே தனது அறைக்கு தூங்க சென்றுள்ளார்.  இந்த நிலையில், நேற்று காலை ரவிக்குமாரின் உறவினர், அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அறையில் ரவிக்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கி உள்ளார். மேலும், அவரது செல்போன் உடைந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர், இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் அளித்தார்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரவிக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமார் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  திருமணமான 3 மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது