×

நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் துவக்கம்!

 

நாமக்கல் நரசிம்ம சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

கடந்த 2022-23 ஆண்டிற்கான சட்டமன்ற மானிய கோரிக்கையின்போது திருக்கோவில்களில் பிரசாதம் வழங்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் விதமாக நாமக்கல் அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்  விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். 

இதனையொட்டி, நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் எம்எல்ஏ இராமலிங்கம் முன்னிலையில் மாநிலங்களவை எம்பி கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் இளையராஜா , நகராட்சி துணை தவைர் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.