×

மனைவியை அவதூறாக பேசியதை கண்டித்த தொழிலாளி படுகொலை... திருப்பூரில் பயங்கரம்!

 

திருப்பூரில் மனைவியை அவதூறாக பேசியதை தட்டிக்கேட்ட கட்டிட தொழிலாளி, கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன் (33). இவருக்கு ராணி (32) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பிரவீன், தனது குடும்பத்துடன் திருப்பூர் கல்லுரி சாலை துவாரகை நகரில் வாடகை வீட்டில் தங்கி, கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில், அவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வரும் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த அண்ணாமலை (40) என்பவர் பிரவீன் மனைவி ராணி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பிரவீனுக்கும், அண்ணாமலைக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று இந்த விவகாரம் தொடர்பாக பிரவீன் மற்றும் அண்ணாமலை இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த அண்ணாமலை வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் பிரவீனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் பிரவீன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, திருப்பூர் வடக்கு போலீசார், பிரவீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அண்ணாமலையை கைது செய்தனர்.