×

பாட்டி இறந்த துக்கத்தில் இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை... தூத்துக்குடியில் சோகம்!

 

தூத்துக்குடியில் பாட்டி இறந்த வேதனையில் லாரி ஓட்டுநர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடியை சேர்ந்தவர் அஜித்குமார்(25). லாரி ஓட்டுநர். இவரது பாட்டி கடந்த சனிக்கிழமை உடல்நல குறைவினால் உயிரிழந்து விட்டார். பாட்டியின் மீது அதிக அன்பு வைத்திருந்த அஜித்குமார், அவரது மறைவால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அஜித்குமார் துறைமுகம் - மீளாவிட்டான் இடையே உள்ள பெரியசாமி நகர் உப்பாற்று ஓடை பகுதியில் ரயில்வே தண்டவாளத்திற்கு சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதில் அவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து தூத்துக்குடி ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாட்டி இறந்த வேதனையில் இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.