×

திருச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி தாய், மகள் பலி!

 

திருச்சி அருகே காவிரி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி தாய், மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் சிறுகமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மோகன். இவர் திருப்பூரில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகேஷ்வரி(33). இவர்களுக்கு அட்சயா (15),  கனிஷ்கா(8), பிரேம் குமார் என 3 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் அட்சயா 10ஆம் வகுப்பும், கனிஷிகா 5ஆம் வகுப்பும் படித்து வந்தனர். கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகேஷ்வரி குழந்தைகளுடன் தனியே வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை 11.30 மணி அளவில் மகேஷ்வரி, தனது இரு மகள்களுடன் சிறுகமணி மலையப்பன் நகர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, திடீரென சிறுமி கனிஷ்கா தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதனை கண்ட தாய் மகேஸ்வரி, அக்கா அட்சயா ஆகியோர் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதனை கண்டு அந்த பகுதி மக்கள் அட்சயாவை பத்திரமாக மீட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெட்டவாய்த்தலை போலீசார் மற்றும் திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் இறங்கி தேடினர்.

அப்போது, மகேஷ்வரி, சிறுமி கனிஷ்கா ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து, போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் மூழ்கி தாய், மகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.