×

விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி!

 

கோவை அருகே சாலை விபத்தில் சிக்கியவர்களை அமைச்சர் செந்தில் பாலாஜி மீட்டு தனது பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.  

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜமீன் காளியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (72). இவர் நேற்று கோவை மயிலேரிப்பாளையம் பகுதியில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஒத்தக்கால் மண்டபம் ஏழுர் பிரிவு அருகே சென்றபோது சீனிவாசன் வாகனத்தின் மீது, எதிரே பொள்ளாச்சி நோக்கி சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் முதியவர் சீனிவாசன், மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த தயா, தவுபிக் ஆகியோர் காயமடைந்தனர். 

அப்போது, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அந்த வழியாக காரில் கோவைக்கு திரும்பி கொண்டிருந்தார். விபத்து நடைபெற்றதை அறிந்த அவர் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கினார். பின்னர் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு காத்திருந்த 3 பேரையும் மீட்டு தனது பாதுகாப்பு வாகனம் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து, அவர் தனது வாகனத்தில் கோவைக்கு புறப்பட்டு சென்றார். சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு தக்க நேரத்தில் உதவிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனிதே நேய செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.