×

ராசிபுரம் அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து: 10-க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்!

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை மெட்டாலா அருகே உள்ள குட்டைகாடு கிராமத்தை சேர்ந்த 15 பெண்கள் இன்று காலை வெங்காய அறுவடை பணிகளுக்காக மினி டெம்போவில் கோரைக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது திடீரென மினி டெம்போ கட்டுப்பாடை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் மினி டெம்போவில் இருந்த 10-க்கும் பெண்கள் பலத்த காயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பலத்த காயமடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.