×

விபத்தில் சிக்கிய குடும்பத்தினருக்கு உதவிய கள்ளக்குறிச்சி ஆட்சியர்!

 

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் சிக்கியவர்களை, மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் காரில் சென்னை விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது முன்னால் சென்ற சரக்கு வாகனத்தின் மீது கார் அதிவேகமாக மோதியது. இதில் கார் மற்றும் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சேகர், அவரது மனைவி இன்பராணி மற்றும் சரக்கு வேன் ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்தனர்.

அப்போது, திருநாவலுர் ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வளர்ச்சி பணிகளை பார்வையிட சென்று கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வானம் மூலம் உளுந்துர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாற்று கார் மூலம் சேகர் குடும்பத்தினர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆட்சியரின் இச்செயலுக்கு சேகர் குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.