×

பணி மாறுதல் கலந்தாய்வு - சேலம் மாவட்டத்தில் 132 போலீசாருக்கு பணி மாறுதல் வழங்கி உத்தரவு!
 

 

சேலம் மாவட்டத்தில் ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த 132 போலீசாருக்கு இடமாறுதல் வழங்கி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார். 

சேலம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள், போக்குவரத்து பிரிவுகள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. சேலம் குமாரசாமிபட்டி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த கலந்தாய்விற்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் தலைமை தாங்கினார்.

இந்த கலந்தாய்வில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் உள்ளிட்ட 132 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப காவல் நிலையங்களில் பணிபுரிய எஸ்பி ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார்.

இந்த கலந்தாய்வின்போது ஓரே காவல் நிலையத்தில் பணிபுரிய 10-க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்த நிலையில், அவர்களில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை தேர்ந்தெடுத்து, அந்த காவல் நிலையத்தில் பணியாற்ற உத்தரவு வழங்கினார்.இந்த கலந்தாய்வில் சேலம் மாவட்ட கூடுதல் எஸ்பிக்கள் ராஜா காளீஸ்வரன், கென்னடி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.