×

நாமக்கல்லில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகாரளிக்க வாட்ஸ்ஆப் எண் அறிமுகம்!

 

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க,  94861 11098 என்ற பிரத்யேக வாட்ஸ்ஆப் எண்ணை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் அறிமுகம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், வளரிளம் பருவத்தினரிடையே  ஏற்பட்டுள்ள முரண்பட்ட நடவடிக்கைகளை முறைப்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது.

எனவே, அதில் முதல் செயல்பாடாக குழந்தைகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளான குழந்தைத் திருமணம், பாலியல் வன்முறை, குழந்தை தொழிலாளர், குழந்தை கடத்தல், குழந்தைகளை வளர்த்து பிச்சை எடுத்தல்,  தெருவோர குழந்தைகள் மற்றும் குழந்தைகளை துன்புறுத்தல் என்று ஆங்காங்கே நடைபெறும்  பிரச்சினைகளை உடனடியாக  நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக நாமக்கல் மாவட்ட ஆட்சியர், 94861 11098 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார். 

இந்த எண்ணிற்கு நீங்கள் உங்களது வாட்ஸ்ஆப் செயலியில் இருந்து Hi என குறுஞ்செய்தி அனுப்பினால் , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து உங்களை தொடர்பு கொண்டு குழந்தைகள் சம்பந்தமான  பிரச்சினைகளுக்கு சரியான வழிகாட்டுதலும் சட்ட நடவடிக்கையும் எடுக்கவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வெண்ணிற்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனைத்தும் குழந்தைகள் சம்பந்தமான தகவல் என்பதால் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் தங்களது செல்போனில் மேற்கண்ட வாட்ஸ் ஆப் எண்ணை பதிவு செய்து கொண்டு உங்கள் பகுதியில்  குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பிரச்சினைகள் ஏதுவாயினும் உங்களின் கவனத்திற்கு வரும்போது, உடனடியாக நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு  தெரியப்படுத்துங்கள்,  பொதுமக்கள் அனைவரும் தங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு  கொடுக்கும்போது நாமக்கல் மாவட்டத்தை  குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் இல்லாத மாவட்டமாக நம்மால் மாற்ற முடியும் என ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தெரிவித்துள்ளார்.