×

சொத்து தகராறில் அண்ணனை அடித்துக்கொன்ற தம்பி... திருப்பூரில் பயங்கரம்!

 

திருப்பூரில் சொத்து தகராறில் அண்ணனை கட்டையால் அடித்துக்கொன்று விட்டு தப்பியோடிய தம்பியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாஸ்கோ நகர் இரணடாவது வீதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன்கள் நாகராஜ்(42), கார்த்திக்(35). இருவரும் பனியன் கம்பெனியில் தொழிலாளி ஆக வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனிடையே, நாகராஜுக்கு, அதே பகுதியில் சொந்தமாக 2 சென்ட் நிலம் இருந்துள்ளது. அதனை தனது பெயருக்கு எழுதி தருமாறு கார்த்திக் கேட்டு வந்துள்ளார். அதற்கு நகராஜ் மறுத்து விட்டதால் அண்ணன், தம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு நாகராஜும், கார்த்திக்கும் வீட்டில் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, கார்த்தி, மீண்டும் நாகராஜ் பெயரில் உள்ள இடத்தை தனது பெயருக்கு எழுதித்தருமாறு கேட்டுள்ளார். அதற்கு நாகராஜ் மறுக்கவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டின் அருகே கிடந்த கட்டையை எடுத்து, நாகராஜை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், கார்த்தி அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இன்று காலை வீட்டின் முன் நாகராஜ் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் நாகராஜின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கார்த்திக்கை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.