×

கண்டமங்கலத்தில் அண்ணா சிலையை சேதப்படுத்தி காலணி மாலை அணிவிப்பு... ஆ.ராசா படத்தையும் மாட்டிச்சென்றதால் பரபரப்பு!

 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மர்மநபர்கள் காலணி மாலை அணிவித்து, ஆ.ராசாவின் படத்தை மாட்டிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் முழு உருவ சிலை அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவு இங்கு வந்த மர்மநபர்கள் சிலர், அண்ணா சிலையின் முகத்தை திமுக கொடியால் மூடி வைத்து, சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர். மேலும், அண்ணாவின் கழுத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தப்பட்ட ஆ.ராசாவின் உருவ படத்தையும் தொங்க விட்ட  அந்த கும்பல், சிலையை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இன்று காலை அண்ணா சிலை அவமதிப்புக்குள்ளானதை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளான அந்த பகுதி பொதுமக்கள், இதுகுறித்து கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அண்ணா சிலையில் இருந்த காலணி மற்றும் ஆ.ராசா படத்தை அகற்றி சிலையை சரி செய்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சிலையை அவமதிப்பு செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டு உள்ளதால், கண்டமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.