×

ஈரோட்டில் தறிப்பட்டறை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு!

 

ஈரோட்டில் தறி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு முனிசிபால் காலனி அடுத்த இடையன்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் மதன்குமார்(31). இவர் தறிப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பிருந்தா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.  இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதன்குமார், தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், பிருந்தா வீரப்பன்சத்திரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவில் தனது வீட்டிற்கு திரும்பி வந்தபோது,  பூட்டு உடைக்கப்பட்டு கதவு  திறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பிருந்தா உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் ஏராளமான வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து, கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளும் சேகரிக்கப்பட்டது. தொடந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.