×

நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்... வத்தலகுண்டு அருகே பயங்கரம்!

 

வத்தலகுண்டு அருகே நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த கணவர் போலீசாரிடம் சரணடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள குன்னுவாரன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்லபாண்டி. இவரது மனைவி அஞ்சுலெட்சுமி(35). இவர்களுக்கு காயத்ரி(16), காளீஸ்வரன்(14) என 2 பிள்ளைகள் உள்ளனர். கணவன் - மனைவி இருவரும், அந்த பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல்சூளையில் கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், அஞ்சுலெட்சுமியின் நடத்தையில் கணவர் செல்லபாண்டி சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இதுதொடர்பாக மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்லபாண்டி, அருகில் இருந்த அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, செல்லப்பாண்டி, விருவீடு காவல் நிலையத்தில் மனைவியை கொலைசெய்ததை ஒப்புக்கொண்டு சரணடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஞ்சுலெட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.