×

கிருஷ்ணகிரி அருகே எலி மருந்தை சாப்பிட்ட சிறுமி பலி!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே எலி மருந்தை சாப்பிட்ட 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கொல்லூர் கொல்லக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பெருமா என்கிற சங்கரன். விவசாயி. இவரது 4 வயது மகள் தனுஸ்ரீ. நேற்று சங்கரின் மனைவி வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், சிறுமி வெளியே விளையாடி கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் வெளியே வாழை மரங்களுக்கு  எலித் தொல்லை காரணமாக, எலி மருந்து வைத்துள்ளனர். அதனை தவறுதலாக சிறுமி தனுஸ்ரீ சாப்பிட்டுள்ளார். இதில் சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக சிறுமியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தனுஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சங்கர் கந்திக்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.