×

3-வது முறையாக மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம்!

 

ஈரோடு அதிமுக மாநகர் மாவட்ட செயலாளராக 3-வது முறையாக தேர்வாகியுள்ள முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், எம்ஜிஆர் - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஈரோடு மாவட்ட அதிமுக 2-ம் கட்ட உட்கட்சி தேர்தல் கடந்த 21ஆம் தேதி, மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட செயலாளர், பொருளாளர், இணை செயலாளர், துணை செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்றவர்களின் விபரத்தை, அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, நேற்று மாநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட கே.வி.ராமலிங்கம், பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, தொண்டர்களுக்கும், பொதுமக்களும் இனிப்புகள் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கேசி பழனிச்சாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் வீரக்குமார், பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், ஒன்றிய செயலாளர் பூவேந்திர குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி, மாணவரணி மாவட்ட இணைச் செயலாளர் யூனிவர்சல் நந்தகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.