×

தஞ்சையில் பெண் கிராம நிர்வாக அலுவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

 

தஞ்சாவூரில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சியில் கலந்துகொண்ட பெண் வீஏஓ திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் அடுத்துள்ள ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த வெங்கடேஷ். இவர் பொதுத்துறை வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி(26). இவர் தஞ்சையில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், புவனேஸ்வரி தஞ்சை அரசர் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான நில அளவை பயிற்சியில் பங்கேற்று வந்தார். நேற்று காலை வழக்கம்போல் அவர் பயிற்சிக்கு சென்ற நிலையில், காலை 11 மணியளவில் திடீரென புவனேஸ்வரி மயங்கி விழுந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள், உடனடியாக அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் புவனேஸ்வரி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.