×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண் படுகொலை; தலைமறைவான கணவருக்கு போலீஸ் வலை!

 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னுர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி காளீஸ்வரி(45). இவர்கள் கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை காளீஸ்வரியின் வீடு நீண்டநேரமாக பூட்டிக்கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். 

அப்போது, வீட்டில் காளீஸ்வரி ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். மேலும், அவரது கணவர் லட்சுமணன் மாயமாகி இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லட்சுமணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.