×

ஈரோட்டில் மகன் மாயமானதால் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

 

ஈரோட்டில் மகன் மாயமானதால் வேதனையில் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சி நகரில் வசித்து வருபவர் சிவ குமாரவேலு(60). இவருக்கு கீதா என்ற மனைவியும், கணேசன், கிஷோர் என 2 மகன்களும் உள்ளனர். மூத்த மகன் கணேசனுக்கு திருமணமாகிவிட்டது. இளைய மகன் கிஷோர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். மேலும், சமீப நாட்களாக மதுப்பழக்கத்திற்கு அடிமையான கிஷோர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். அவரது நிலையை எண்ணி தந்தை சிவக் குமாரவேலு மனவேதனையுடன் காணப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியே புறப்பட்டு சென்ற கிஷோர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் தந்தை சிவக்குமாரவேலு அவரை பல்வேறு இடங்களில்தேடி பார்த்துள்ளார். ஆனால் கிஷோர் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த சிவ குமாரவேலு வீட்டில் தனியாக இருந்தபோது  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலின் பேரில் வீரப்பன் சத்திரம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகன் மாயமானதால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.