×

மனநலம் பாதிக்கப்பட்ட மகனை விஷம் வைத்துக்கொன்று, தந்தை தற்கொலை... கோவையில் சோகம்!

 

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் மல்லையாசாமி (60). டெய்லர். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு பவானிசங்கர்(37), சத்திய நாராயணன்(37) என்ற 2 மகன்கள் உள்ளனர்.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி உயிரிழந்து விட்டார். இளைய மகன் சத்திய நாராயணன், தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.  மூத்த மகன் பவானி சங்கர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவரை, மல்லையாசாமி கவனித்து வந்தார்.

இந்த நிலையில், பவானிசங்கர், அவ்வப்போது வீட்டில் இருந்த பொருட்களை உடைத்தும்,சேதப்படுத்தியும் வந்துள்ளார். மேலும், வெளி நபர்களை தாக்கியும் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த  மல்லையாசாமி, நேற்று முன்தினம் இரவு பவானிசங்கருக்கு, விஷத்தை கொடுத்துவிட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு  சிறிது நேரத்திலேயே மல்லையாசாமி  உயிரிழந்தார். பவானிசங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை அவரும் உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து போத்தனுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.