×

காஞ்சிபுரத்தில் நவ.25-ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் நவம்பர் 2022 மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குள் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். 

ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு ஆட்சியர் ஆர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார். கூட்டம் நடைபெறும் அன்றைய தினம் பிரதான் மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தில் இணையவழி பதிவுகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் ஆதார் அட்டை - நகல், சிட்டா, அடங்கல் நகல், நில வரைபடம் - நகல், ரேஷன் கார்டு - நகல், நிலத்தின் பரப்பளவு - பட்டா நகல் ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பதிவு செய்து பயன் அடையுமாறு, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.