×

ஈரோட்டில் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் தான விழிப்புணர்வு பேரணி!

 

ஈரோட்டில் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற கண் தான விழிப்புணர்வு பேரணியில் 150-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

ஈரோட்டில் தேசிய கண் தான விழிப்புணர்வு தினத்தை ஒட்டி அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் தான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. மருத்துவமனை அருகே நடைபெற்ற பேரணியை, ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரிமா சங்க மாவட்ட கவர்னர் முத்தையா சிறப்பு விருந்தாக இதில் கலந்து கொண்டார். இந்த பேரணியில் வி.ஈ.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் 150-க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மருத்துவமனை வளாகத்தில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியானது மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்று நிறைவு அடைந்தது. இந்த பேரணியில் பங்கேற்றவர்கள் கண் விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரங்களை  பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.