×

திமுக எம்பி ஆ.ராசா மீது ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு!

 

இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் திமுக எம்.பி ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்ட எஸ்.பியிடம், பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

திமுகவின் துணை பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா, இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக கூறி, அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சார்பில் ஈரோடு மாவட்ட எஸ்.பி சசிமோகனை சந்தித்து, அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாவட்டத் தலைவர் எஸ்.டி செந்தில்குமார் ஆகியோர் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில்,  இந்து மதத்தைப் பற்றி அவதூறாக பேசிய ஆ.ராசா மீது ஐபிசி பிரிவு எண்கள் 153, 153 (A), 295, 295(A), 296, 298, 499, 504 மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.

இந்த நிகழ்வின்போது ஈரோடு தெற்கு பாஜக பொதுச்செயலாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, செந்தில், வேதானந்தன், மகளிரணி புனிதம் ஐயப்பன், வழக்கறிஞர் பிரிவு ஈஸ்வரமூர்த்தி, டேட்டா மேனேஜ்மென்ட்  ஏஎன்டி செந்தில், ஊடகப்பிரிவு  அண்ணாதுரை, எஸ்சி அணி  சக்திவேல், சிறுபான்மை அணி மைக்கேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.